
இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவையான பாரத் டாக்ஸி உபர், ஓலா போன்ற தனியார் டாக்ஸி நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்ததுறை அமைச்சகம் மற்றும் தேசிய மின் ஆட்சி பிரிவு இணைந்து உருவாக்கியுள்ள இந்த சேவை ஓட்டுனர்களுக்கு பங்குதாரர் என்ற உரிமையையும் 100% வருமானத்தையும் வழங்குகிறது.
அதேபோல பயணிகளுக்கு நியாயமான நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுடன் நம்பகமான சேவையையும் பாரத் டாக்ஸி மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
டிஜிலாக்கர், யூமங்க போன்ற தேசிய தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பாரத் டாக்ஸி வரும் நவம்பரில் டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் 20 நகரங்களில் விரிவடைய இருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் பாரத் டாக்ஸியில் ஓட்டுனர்கள் கூட்டுறவு உறுப்பினர்களாகவும் பங்குதாரர்களாகவும் சேர முடியும். தனியார் நிறுவனங்களை போல் பெரிய அளவில் கட்டண விகிதம் பெறப்பட மாட்டாது என்பதால் ஓட்டுனர்கள் தங்கள் வருமானத்திலிருந்து எந்தவித கமிஷனையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
பாரத் டாக்ஸி சேவையில் நியாயமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாலும் அதிக தேவை காலங்களிலும் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என்பதாலும் பயணிகள் மத்தியில் இது வெளிப்படை தன்மையையும் நம்பக தன்மையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல தேசிய டிஜிட்டல் தளங்களுடன் பாரத் டாக்ஸி சேவை இணைக்கப்பட்டுள்ளதால் அடையாள சரிபார்ப்பு மற்றும் சேவை வழங்குதல் எளிமையாக இருக்கும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தொடங்க உள்ள இந்த திட்டத்தில் சாரதி என்ற பெயரில் முதற்கட்டமாக 5000 ஆண் மற்றும் பெண் ஓட்டுனர்கள் இணைக்கப்பட உள்ளன. அடுத்த
கட்டமாக மும்பை, புனே, போபால், லக்னவ், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 20 நகரங்களுக்கு இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியால் டாக்ஸி ஓட்டுனர்கள் தங்களது தொழிலுக்கான உரிமையை முழுமையாக பெறவும், பயணிகள் மலிவு விலையில் பயணங்களை மேற்கொண்டு பயனடையவும் ,மத்திய அரசு வழிவகை செய்திருக்கிறது.




