
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை 2024 பிப்ரவரியிலேயே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசு பரிந்துரைத்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 19 மாதங்களாகியும் ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
மெட்ரோ திட்டங்கள் முதற்கட்ட பரிசீலனையில் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வளர் தயானந்த கிருஷ்ணன் ஆர்டிஐ-ன் மூலம் தகவல் பெற்றுள்ளார். மத்திய அரசின் ஒப்புதல் தாமதமாவதால் நிலம்
கையகப்படுத்துதல் உள்ளிட்ட தொடக்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன .
கான்பூர் ஆகிரா போன்ற பிற மாநில நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் சில மாதங்களிலேயே ஒப்புதல் பெற்ற நிலையில் தமிழகத்தின் திட்டங்கள் தாமதமாவது மத்திய அரசின் பாகுபாட்டையும் காட்டுவதாக மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு திட்டம் எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை என்றால் அந்த திட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட சிறப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்வார்கள்.
ஆனால் தமிழக அரசு இது போன்ற முக்கியமான மத்திய திட்டங்களுக்கு இதுவரை சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்யாததே கால தாமதத்திற்கான முக்கிய காரணம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாக மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.




