
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமாக சிக்கனூத்து கிராமத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றான். இந்த நிலையில், ஒரு மாதம் முன்பாக மூர்த்தியின் மூத்த மகன் மணிகண்டன் இந்த தோப்பில் தந்தையுடன் வேலைக்கு சேர்ந்துள்ளார். நேற்று மூர்த்தியின் இளைய மகன் தங்கபாண்டி மனைவியுடன் தோப்புக்கு வந்துள்ளார்.
மது பருகியிருந்த இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தோப்பின் மேலாளர் ரங்கசாமி குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றார். தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், காவலர் அழகுராஜா, மேலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது ரத்த காயத்தில் இருந்த மூர்த்தியை பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், மருத்துவ உதவி செய்ய 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து இருக்கின்றார். ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது சம்பவம் குறித்து விசாரித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், இதுபோன்று சண்டையிட கூடாது என்றும், வாக்குவாதம் தவிர்த்து இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கின்றார். அப்பொழுது ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரிடம், “எங்கள் குடும்பத்தகறாரில் தலையிட நீ யார் ?” என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒருகட்டத்தில் மகன்களுடன் மூர்த்தியும் சேர்ந்து, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் உடன் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் வீரியமடைந்த நிலையிலெ, “போடுடா அவன” என மூர்த்தி தெரிவிக்க, மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் உள்ளிட்டோரை இளநீர் வெட்டும் அரிவாளுடன் வெட்ட துரத்தி இருக்கின்றனர். அப்போது எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல், சக போலிசான அழகுராஜா, மேலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் தப்பித்து ஓடினர்.
50 மீட்டர் தூரம் இருளில் தென்னந்தோப்பில் ஓடிய எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலை, மூர்த்தி மற்றும் மூர்த்தியின் மகன்களான மணிகண்டன் தங்கபாண்டி என மூன்று பேரும் சுற்றி வளைத்து சண்முகவேலை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சண்முக பாண்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெகுநேரமாக காவல் நிலையம் திரும்பாத சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரித்தனர். அப்போது, தென்னந்தோப்பில் நடந்த சம்பவம் குறித்து, தப்பித்து ஓடியவர்கள் குடிமங்கலம் போலீசாருக்கு விவரங்களை தெரிவித்திருக்கின்றனர். தகவல் அடிப்படையில், காவல்துறையினர் தென்னந்தோப்பிற்கு வருவதற்கு முன்பாக, மூர்த்தி மணிகண்டன் தங்கப்பாண்டி மூவரும் தப்பித்து ஓடி விட்டனர்.
இந்த தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். சைபர் கிரைம் மூலமாக லொகேஷனை டிராக் செய்வதற்கும், சம்பந்தப்பட்டவர்களின் நகர்களை தீவிரமாக கண்காணித்து பிடிப்பதற்கும், புலனாய்வு விசாரணைக்காவும் ஆறு தனிப்படைகள், தலைமருமான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார், டி.ஐ.ஜி. சசி மோகன் மற்றும் திருப்பூர் மாவட்ட எஸ்பி யாதவ் க்ரிஷ் அசோக் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ரத்த காயங்களுடன் இருந்த மூர்த்தியை வெட்டியது மணிகண்டனா தங்கப்பாண்டியா அல்லது மூர்த்தியே தன்னை வெட்டி காயப்படுத்திக் கொண்டானா ? என மூர்த்தியின் குடும்பத்தாரிடம் தற்பொழுது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முக வேலை கொடூரமாக கொன்ற மூர்த்தியின் மகன்கள் மணிகண்டன் மற்றும் தங்கப்பாண்டி இருவர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி, கொள்ளை, எஸ் சி எஸ் டி வன்கொடுகை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் சில வழக்குகள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகின்றன. இவர்களின் பின்னணி குறித்தும் தற்பொழுது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




