தனது திருமண பதிவுகளை ஸ்மிருதி மந்தனா நீக்கியுள்ள நிலையில், அவரை வருங்கால கணவர் ஏமாற்றினார் என்று கூறி ஒரு ஸ்கிரீன்ஷாட் ரசிகர்கள் வைரலாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக திகழும் ஸ்மிருதி மந்தனா, பல்வேறு கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றி சிகரங்களை தந்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இந்திய அணி வென்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய பங்கு வகித்தார்.
அத்துடன், மகளிர் பிரீமியர் லீகில் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவரும் பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில வாரங்களாக இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில், இருவரது திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும், இது தொடர்பான ரீல்ஸ் வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகின. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஸ்மிருதி மந்தனா குடும்பத்தினருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு, ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, திருமணம் நடைபெறும் இடத்துக்கே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சீனிவாஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அவரது சகோதரி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை உடல்நிலை காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டதாகவும், தங்களின் தனி உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பலாஷ் முச்சல் குறித்த ஒரு ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது. மேரி டி கோஸ்டா என்ற பெண்மணி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பலாஷுடனான சாட் ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டுள்ளார். அதில் மும்பையில் உள்ள வேர்சோபா கடற்கரையில், மேரியை அதிகாலை 5 மணிக்கு பலாஷ் முச்சல் சந்திக்க அழைத்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல், ஸ்மிருதியை காதலிப்பது குறித்து மேரி கேள்வி எழுப்பியதற்கும், பலாஷ் எந்த பதிலையும் தெரிவித்தில்லை. இந்த ஸ்கிரீன்ஷாட்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், இவை வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனால், ரசிகர்கள் கருத்து பதிவு செய்து, ஸ்மிருதி மந்தனாவை பலாஷ் ஏமாற்றியுள்ளார் என்று கூறி வருகிறார்கள். இதன் பக்கவிளைவாக, திருமணம் தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்த அனைத்து பதிவுகளையும் ஸ்மிருதி மந்தனா நீக்கியுள்ளார்.
அதேபோல், திருமண அறிவிப்பு வீடியோவை தங்களது பக்கங்களில் பகிர்ந்திருந்த சக வீராங்கனைகள் ஜெமிமா ஸ்ரேயங்காவும் அதனை நீக்கினர். இதனால், திருமணம் மருத்துவ காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவா என்கிற சந்தேகம் உருவாகியுள்ளது.








