சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை மறுநிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ₹50 உயர்த்தப்பட்டு ₹1,899 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹110 உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதமும் மீண்டும் விலை உயர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் உணவகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த சிலிண்டர் ₹868.50 என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.








