Home தகவல் களஞ்சியம் “தாயை ஏமாற்றிய ஒரு தவறு… காந்தியின் வாழ்க்கையை மாற்றிய திருப்பம்!”

“தாயை ஏமாற்றிய ஒரு தவறு… காந்தியின் வாழ்க்கையை மாற்றிய திருப்பம்!”

நல்லெண்ணம், அசைக்க முடியாத உண்மை, வன்முறையற்ற போராட்டம் — இவை அனைத்தின் சின்னமாக உலகம் முழுவதும் மதிக்கப்பட்ட பெயர் மகாத்மா காந்தி. ஆனால், அவர் எப்படி இப்படிப்பட்ட மனிதராக உருவெடுத்தார்?

காந்தியை ‘மகாத்மா’ என்று அழைத்தது ரவீந்திரநாத் தாகூர்  ஆவார். இந்த பட்டத்தை தாகூர் 1915 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கினார் என்று வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன. 

1869 அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மிக அமைதியான, வெகுளியான குழந்தை. வகுப்பில் கூட ஆசிரியருடன் நேருக்கு நேர் பேசத் தயங்குபவர்.

ஒருமுறை ஆசிரியர் ஒரு ஆங்கிலச் சொல்லைப் படிக்கச் சொல்லியபோது, தன்னம்பிக்கை குறைவால் நடுங்கியபடி நின்று, “எனக்கு அதைச் சொல்ல முடியவில்லை” என்று ஒப்புக்கொண்டார். இந்தச் சிறிய சம்பவமே அவரின் உள்ளுணர்வை வெளிக்காட்டும் ஒரு சன்னல் போல.

ஆனால் அதே சிறுவனே பின்னர் ஒரு பேரரசை முழங்கால் மடக்கச் செய்தது என்பது வரலாற்றின் மிகப் பெரிய அதிசயம்.

காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி ஒரு நிர்வாகத் தலைவராக இருந்தாலும், வீட்டின் உண்மையான தலைவராக இருந்தது தாயார் புட்லிபாயின் பக்தியுடனான கருணை. தினசரி பிரார்த்தனை, அன்னதானம், உண்மையைப் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கை — இவை அனைத்தும் காந்தியின் மனதில் சிறுவயது முதலே ஆழமாக பதிந்தன.

காந்தியின் வாழ்க்கையில் பலருக்கும் அறியாத உண்மை — ஒருநாள் அவர் மாமிசம் சாப்பிட்டார்! அப்போது அவர் நம்பினார். “ஆங்கிலேயர்களைப் போல வலிமையானவராக இருக்க, மாமிசம் சாப்பிட வேண்டும்.”

ஆனால் தாயை ஏமாற்றிய குற்ற உணர்வு அவரை இரவும் பகலும் உளைச்சது. அந்த ஒரே தவறே அவரது வாழ்வை “உண்மையை காக்கும் பயணம்” நோக்கி திருப்பியது. அந்த அனுபவத்தை அவர் பின்னர், வாழ்க்கையின் மிகப் பெரிய பாடமாகக் குறிப்பிட்டார்.

13 ஆம் வயதிலேயே கஸ்தூர்பாவை மணந்த காந்தி, திருமணத்திற்கான அர்த்தமே புரியாத வயதில் இருந்தார். கஸ்தூர்பாவிடம் கட்டுப்பாடுகள் விதிக்க முயன்றார். ஆனால் பின்னர் அவர் எழுதுகிறார் “நான் அவளை மாற்ற நினைத்தேன்… ஆனால் அவள் என்னை மாற்றினாள்.

” வீட்டு வாழ்க்கையே அவருக்கு பொறுமை, பெண்களுக்கு மரியாதை மற்றும் சமத்துவத்தின் உண்மையான பாசுரங்களை கற்றுக் கொடுத்தது.

1888ல் சட்டம் படிக்க லண்டன் சென்ற காந்தி, அந்நாட்டின் உணவு, மரபுகள், மொழி போன்றவற்றில் பல சவால்களை சந்தித்தார்.

அங்கு அவர் ஒழுக்கமுள்ள, எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். அந்த நாட்களில் ‘பகவத் கீதை’ அவருக்கு ஆழமான வழிகாட்டியாக மாறியது. அவரே பின்னர் கூறுகிறார்: “என் உள் போராட்டத்தில் என்னை மீட்டது கீதை.”

பலர் நினைப்பது போல காந்தி இந்தியாவில் மாறவில்லை. அவர் “மஹாத்மா” ஆனது தென்னாப்பிரிக்காவில்தான்.

1893ல் அங்கே சந்தித்த இனஅனீதி —ரெயில் தளத்தில் தோல் நிறம் காரணமாக அவர் வெளியே தள்ளப்பட்ட அவமானம்—அவருள் புதைந்திருந்த பயத்தையும், குழப்பத்தையும் முழுதாக எரித்தெறிந்தது. அந்த ஒரு இரவு காந்தியை வேறு மனிதனாக்கியது.

வன்முறையில்லாத போராட்டத்தின் தத்துவம், “சத்யாகிரகம்”, தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்தது. உண்மை + பொறுமை = ஆயுதம் என்ற முறையில் உலகம் இதைப்பற்றி முறையாக கண்டது.

1915ல் இந்தியாவிற்கு திரும்பிய காந்தி, விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள் என அனைவரின் நம்பிக்கைக் குரலாக மாறினார். எளிமையான ஆடை, கையில் கம்பு —ஆனால் உறுதியான உண்மை, பொறுமை, தன்னம்பிக்கை —இவைதான் அவரது அரசியல்.

தண்டி உப்பு சத்தியாகிரகம் முதல் குவிட் இந்தியா வரை —ஒவ்வொரு போராட்டமும் பிரிட்டிஷ் பேரரசுக்கே அதிர்ச்சியூட்டியது.காந்தி ஒரு அரசியல் தலைவர் மட்டும் அல்ல.மனித உள்ளத்தை மாற்றிய அரிய சிந்தனையாளர்.

அவருடைய போராட்டத்திலிருந்து நேல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஆங் சான் சூ கீ போன்ற உலகத் தலைவர்கள் ஒளி பெற்றனர்.

காந்தி பிறப்பிலேயே “மஹாத்மா” அல்ல.— உண்மைக்காக பயந்த ஒரு சிறுவன்— தாயை ஏமாற்றிய குற்ற உணர்வில் நடுங்கிய இளம் சிறுவன்— வெகுளியான மாணவன் ஆனால் உண்மை, பொறுமை, கருணை என்ற மூன்று சொற்களால் அவர் “மகாத்மா” ஆனார்.அவர் கூறியது போல— “என் வாழ்க்கையே என் செய்தி.”