முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கியாக 13 கோடி ரூபாயை செலுத்தக் கோரி, அவர் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் மற்றொரு சட்டப்பூர்வ வாரிசான தீபக்கும் சேர்க்கப்பட்டார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சரியான தொகையை தெளிவாக அறிவித்தால், அதை செலுத்த தயாராக இருப்பதாகவும் தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எடுத்துக் கொண்டு, வரி பாக்கி தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சரவணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வரி பாக்கி தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு முன்பே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வரி பாக்கி தொடர்பாக இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை, வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








