Home தமிழகம் “இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: தமிழக மாவட்டங்களுக்கு அலர்ட்”

“இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: தமிழக மாவட்டங்களுக்கு அலர்ட்”

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் அம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே உள்ள இலங்கை கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காவிரி படுகை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை அன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 11ஆம் தேதி சென்னைக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அண்டை மாவட்டங்களுக்கும் அன்றைய தினம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது