கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு பகுதியில் முடி உதிர்வு பிரச்சனைக்கு அழகு நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்ட கல்லூரி மாணவிக்கு தீராத தலைவலி ஏற்பட்டதால் அவர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசெல்வன் மற்றும் ரூபி ஆண்டனி பாய் இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஞானசெல்வன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி ரூபி ஆண்டனி பாய் இரண்டு மகள்களுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் காலை ரூபி ஆண்டனி பாய் தனது 19 வயதான மூத்த மகள் அஸ்வினியை வீட்டில் விட்டுவிட்டு இளைய மகளுடன் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது அஸ்வினியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் வீட்டு கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் அஸ்வினி உடல் முழுவதும் கருகி சடலமாக கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் தாயார் ரூபி ஆண்டனி பாய்க்கு தகவல் கொடுத்த நிலையில் உடனே ஓடி வந்த ரூபி மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 19 வயதான அஸ்வினி நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் விலங்கியல் முதலாம் ஆண்டு பயின்று வருவதும் முடி உதிர்வு பிரச்சனையில் சிக்கிய அஸ்வினி நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் முடி உதிர்வு பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.
அஸ்வினி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தீராத தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அஸ்வினி தலைவலி பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியதாகவும் அப்போதிலிருந்தே அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஸ்வினி வீட்டில் பைக்கிற்கு பயன்படுத்துவதற்காக பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து தாயார் ரூபினி ஆண்டனி பாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
முடி உதிர்வு பிரச்சனைக்காக தனியார் அழகு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பெண்கள் தங்கள் முடி உதிர்வு பிரச்சனைக்கு தகுதியான மருத்துவர்களை சந்தித்து தீர்வு காண வேண்டும். அதை விடுத்து அழகு நிலையங்களை நம்பி செல்வது வீண் பண விரயத்தையும் உடல் நல கோளாறுகளையும் உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.








