Home தமிழகம் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – கனமழை வாய்ப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – கனமழை வாய்ப்பு

நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி, நேற்றைய தினம் இலங்கை கடலோர பகுதிகளை அண்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கியிருக்கக்கூடும். இது தொடர்ந்து மேற்கு–வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நகரும் வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை சென்னைக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு நாளையும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களிலும் மழை வாய்ப்பு தொடரும் நிலை காணப்படுவதால், கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சில கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.