Home உலகம் “டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி”

“டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி”

H-1B விசாக்களுக்கான கட்டணத்தை ஆண்டுக்கு 88 லட்சம் ரூபாயாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து விசா கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவில் தங்கி பணி புரிந்து வரும் வெளிநாட்டை சார்ந்தவர்களுக்கு H-1B விசா வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த விசாக்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் 71% த்துடன் இந்தியா முதலிடத்திலும் 11.7% த்துடன் சதவீதத்துடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன

அமெரிக்கா வழங்கிய அனைத்து H-1B விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்திய வம்சாவழி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதில் இன்போசிஸ் மற்றும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

ஏப்ரல் செப்டம்பர் 2024 காலகட்டத்தில் வெவ்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மொத்தம் 1.3 லட்சம் H-1B விசாக்களில் சுமார் 24,766 விசாக்கள் இந்திய வம்சாவழி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன இந்த ஆண்டில் இதுவரை அமேசான் 10,000-க்கும் மேற்பட்ட H-1B விசாக்களையும் மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா நிறுவனங்கள் தலா 5000 விசாக்களையும் பெற்று வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தியுள்ளன.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசா மூலம் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேடு செய்துள்ளனர் என்று அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில் இந்த விசா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விசாவுக்கான ஆண்டு கட்டணத்தை 1,32,000 ரூபாயிலிருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளதாக வெள்ளை மாளிகையின் செயலாளர் வில் காப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த அதிரடி உத்தரவால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என்ற இந்தியர்களின் கனவும் தகரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் H-1B விசாக்களுக்கான ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் விளக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

H-1B விசாவுக்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலவழித்து வெளிநாடுகளிலிருந்து ஊழியர்கள் அழைத்து வருவதற்கு பதிலாக அமெரிக்க பல்கலை கழகங்களில்லிருந்து வரும் இளம் பட்டதாரிகளுக்கு பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பை உருவாக்குமாறு நிறுவனங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த உத்தரவால் H-1B விசா வைத்திருப்பவர்களையே பெரிதும் நம்பியுள்ள ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5% க்கு மேல் சரிந்தன.