இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 குடும்பத்தினர் தங்கள் வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் முழு ஊரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மொத்தமாக 140க்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம். இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இலங்கையின் 17 மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் முக்கிய சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.
இன்னும் பல நாட்களுக்கு கனமழை தொடரும் என்று கணிக்கப்பட்டதால் இலங்கையில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. அதேபோல் அவசர நிலையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாகாணங்கள் தாறுமாறாக மாறிவிட்டன.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க இந்திய மீட்பு படையினர் களமிறங்கியுள்ளனர். இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் பன்னாலா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய எட்டு பேரை இந்திய கடற்படை ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளன. அதேபோல் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தும் மீட்பு பணிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
விக்ராந்த் கப்பலில் இருந்து செயல்படும் இரண்டு ஹெலிகாப்டர்களும் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை நினைவூட்டும் வகையில், இலங்கையிலும் ஒரு கிராமமே முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை–ரம்புகெலா என்ற பகுதியில் அதிகமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 38 குடும்பங்களைச் சேர்ந்த 145க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளோடு மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த இடத்தில் இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 135க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு படையினர் புதைந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான மீட்பு பணிகள் முடிந்த பின்னரே நிலைமை குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








