சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக கூறி ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டா அளித்த புகார் கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக உள்ளது.
தனது முதல் மனைவியுடன் விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணமாக ஜாய் கிரிசல்டாவை திருமணம் செய்ததாக அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதற்குமீதியாக, தற்போது ஜாய் கிரிசல்டா ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம் என வரும் செய்திகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிசல்டா புகார் அளித்ததுடன், பல ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டியும் வழங்கி வருகிறார். அப்போதெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறார்.
அண்மையில் தனது இன்ஸ்டா பதிவொன்றில் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து, “அப்பா, எனக்கு நியாயம் வாங்கிக் கொடுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். இவரது இந்த செயல் விவகாரம் மீது பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து, விவகாரத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. இதே சமயம், மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை மௌனமாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசல்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையை தீர்க்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும் அனுமானங்களையும் வெளியிடாமல் இருப்பதை அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜாய் கிரிசல்டா எதிர்பார்ப்பது போல நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து ஆதரவும் பிரார்த்தனைகளையும் வழங்கிய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.”
இந்த பதிவு தற்போது இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது.இந்த விவகாரம் தொடங்கியது முதல், மாதம்பட்டி ரங்கராஜின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், வியாழக்கிழமை காலை மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி சுத்தியுடன் மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.








