மாணவர்களின் படிப்பு திறன் சிறப்பாக வளர வேண்டும் என்ற நோக்கில், அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரப் பிரதேச அரசு அந்த மாநிலத்திலுள்ள தொடக்கப்பள்ளியிலிருந்து மேநிலை பள்ளி வரை உள்ள எல்லா பள்ளிகளிலும் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காலை வகுப்பு தொடங்குவதற்கு முன் 10 நிமிடங்கள் மாணவர்கள் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். அந்த 10 நிமிடத்தில், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற முக்கிய செய்திகளை மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாசித்து காட்ட வேண்டும்.
இதற்காக பள்ளிகளில் ஹிந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது. அதோடு, மாணவர்களின் சொல்வளம் வளரக்கூடிய வகையில், செய்தித்தாளிலிருந்து ஐந்து கஷ்டமான சொற்களை தேர்வு செய்து, “இன்றைய சொல்” அறிவிப்பாக பள்ளி பலகையில் எழுத வேண்டும்.
மேலும், செய்தித்தாளில் வரும் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களிடம் குழு விவாதமும் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், விமர்சன சிந்தனை மற்றும் கவனத்திறன் எல்லாம் மேம்படும். அதோடு, சமூக விழிப்புணர்வும் உருவாகும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.








