வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூரில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை வந்தடைந்தார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பதியிலிருந்து மூன்று ஹெலிகாப்டர்களில் நேரடியாக தங்கக் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடிற்கு வந்த குடியரசுத் தலைவரை, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
ஹெலிபேடிலிருந்து மிகுந்த பாதுகாப்புடன் தங்கக் கோவில் வளாகத்திற்கு வந்த குடியரசுத் தலைவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதற்கட்டமாக, தங்கக் கோவில் வளாகத்தில் சுமார் 1,700 கிலோ வெள்ளியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகாலட்சுமி அம்மனை தரிசனம் செய்தார். அதன் பின்னர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்தார்.
மேலும், வைபவ லட்சுமி கோவிலில் குடியரசுத் தலைவர் தாமே சிறப்பு பூஜை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, மதியம் 12:30 மணியளவில் தங்கக் கோவில் வளாகத்திலிருந்து சாலை மார்க்கமாக அருகிலுள்ள ஹெலிபேடிற்கு சென்ற குடியரசுத் தலைவர், அங்கிருந்து ராணுவத்தின் மூன்று ஹெலிகாப்டர்களில் மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,700-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.








