Home இந்தியா “வரி போர் – கேரளா நோக்கி ஆம்னி பேருந்துகள் ஒய்வு!”

“வரி போர் – கேரளா நோக்கி ஆம்னி பேருந்துகள் ஒய்வு!”

கேரளாவுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் பணிநிறுத்தத்தில் தொடரும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு செல்லும் தனியார் பேருந்துகளுக்கு கூடுதலாக வரி வசூலிக்கப்படுவது குறித்து அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “ஆல் இந்தியா பெர்மிட்” (All India Permit) எனப்படும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் அனுமதி இருந்தபோதிலும், கேரள அரசு கூடுதலாக வரி வசூலித்து வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்றைய தினம் மட்டும் 30 பேருந்துகளிடமிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம், மொத்தம் ரூ.70 லட்சம் வரை கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறானது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்றைய தினம் வழக்கமாக 90 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய இடத்தில், முன்பதிவு செய்யப்பட்ட சில பயணங்கள் காரணமாக வெறும் 10 பேருந்துகள் மட்டுமே சென்றுள்ளன.

இன்றைய தினம் அதுவும் குறைக்கப்பட்டு, முழுமையாக கேரளா நோக்கி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக, தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று ஒரு தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். ஆனால் அந்தக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை.

அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை, கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.