Home இந்தியா “சொர்க்கவாசல் திறப்பு – பக்தர்களுக்கான இலவச தரிசன ஏற்பாடுகள்”

“சொர்க்கவாசல் திறப்பு – பக்தர்களுக்கான இலவச தரிசன ஏற்பாடுகள்”

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு வரும் 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறித்து முக்கிய முடிவுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

அது என்ன முடிவு? இந்த வைகுண்ட ஏகாதசியில் எத்தனை நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்? இலவச தரிசன டிக்கட்டுகள் எப்படி வழங்கப்படும்? எந்தெந்த சேவைகள் ரத்து போன்ற தகவல்களைப் பார்ப்போம்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அரங்காவலர் குழு கூட்டம், தலைவர் பி.ஆர். நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

முதல்வர் ஆலோசனையின் படி முதல் மூன்று நாட்கள் ரூ.300 ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி டிக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த நாட்களில் இலவச தரிசனம் மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல், ஜனவரி 2 முதல் ஜனவரி 8 வரை ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான ஒரு நாளுக்கு 15,000 டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி விஐபி தரிசனத்திற்கான ஒரு நாளுக்கு 1,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த நாட்களிலும் அனைத்து முன்னுரிமை மற்றும் சிறப்பு தரிசனங்களும், ஆர்ஜீத சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் ஆன்லைனில் இலவச டிக்கெட்டுகள் குழுக்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை குழுக்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2 அன்று இந்த குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் தங்களின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தரிசன டிக்கெட்டுகளை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேவஸ்தான இணையதளம், மொபைல் செயலி, வாட்ஸ்அப் செயலி ஆகியவற்றின் மூலம் பதிவு செய்யலாம். மொத்தம் 10 நாட்களுக்கு 8 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. கீழ்த் திருப்பதியில் கூட டோக்கன்களும் வழங்கப்படும். ஜனவரி 2 முதல் 8 வரை நேரடியாக வந்த பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் முதல் மூன்று நாட்களான டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் குழுக்களுக்காக வழங்கப்பட்ட இலவச டிக்கெட் கொண்டவர்களே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாமல் வந்தால் அந்த நாட்களில் திருமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் போது ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், இம்முறை அந்த பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக இலவச டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.